உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இருந்து, மூத்த வீரரான எஸ்.வி. சுனில் முழங்கால் காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் இந்திய அணி பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள நிலையில், அங்கு சுனிலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாத இறுதியில் மஸ்கட்டில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 200-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ள சுனில், முன்களத்தில் ஆகாஷ்தீப்புடன் சேர்ந்து அணியின் தாக்குதல் ஆட்டத்தை வழிநடத்தும் முக்கிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைதானம் திறப்பு: இதனிடையே, உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ள கலிங்கா மைதானம் மறுசீரமைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.