மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது.
2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) 2-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரின் கடைசி பந்திலேயே பிஷூ உமேஷ் பந்தில் பிஷூ ஆட்டமிழந்தார். 98 ரன்களில் இருந்த சேஸ் சதம் அடித்தார். அதன்பிறகு, அந்த அணி உமேஷ் யாதவ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன்மூலம், அந்த அணி 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
பிரித்வி ஷா தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி துரிதமாக ரன் குவித்து வந்தார். மறுமுனையில் நிதானம் காட்டி வந்த ராகுல் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, பிரித்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பவுண்டரிகளாக அடித்து வந்த பிரித்வி தனது 2-ஆவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தினார்.
2-ஆவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில், இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 52 ரன்களிலும், புஜாரா 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.