மே.இ.தீவுகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியுடன் செலஃபி எடுக்க முயன்ற 19 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதன் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவத்தில் 19 வயது இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து உப்பல் காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில்,
ஹைதராபாத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியை காண கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்திருந்த முகமது கான் (19) கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மைதானத்துக்குள் அத்துமீறிச் சென்று விராட் கோலியுடன் கட்டிப்படித்து செல்ஃபி எடுக்க முயன்றார். விசாரிக்கையில் அவர் விராட் கோலியின் தீவிர ரசிகர் என தெரிவித்தார். எனவே போட்டியின் போது மைதானத்துக்குள் அத்துமீறிச் சென்ற காரணத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.