ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் உதவி புரிந்துள்ளதற்கு பெடரர், ஜோகோவிச் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மஜோர்கா தீவில் தான் நடால் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அங்கு புதன்கிழமை ஏற்பட்ட தொடர் வெள்ளத்தால் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து விட்டனர்.
இதையடுத்து நடால் தனது வசிப்பிடத்தில் உள்ள கிடங்கு, விளையாட்டு மையம், அகாதெமியை திறந்து பொதுமக்கள் தங்க உதவி செய்தார். மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களையும் மீட்க உதவினார். காயம் காரணமாக நடால் தற்போது ஷாங்காயில் நடைபெறும் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் ஏனைய முன்னணி வீரர்களான பெடரர், ஜோகோவிச் இருவரும் நடாலின் செயலைப் பாராட்டி உள்ளனர்.