மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இருவரும் 3-ஆம் நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கினர். ரஹானே இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக 5 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் 80 ரன்களுக்கு ஹோல்டர் பந்தி் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பந்த் 92 ரன்கள் எடுத்து மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அஸ்வின் ஓரளவு ரன் சேர்க்க இந்திய அணி 350 ரன்களை கடந்தது. அஸ்வின் 35 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், இந்திய அணி 106.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை இழந்து அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை விளையாடவுள்ளது.