ஒரு கிரிக்கெட் வீரர் சதமடித்தால் தான் செய்தி. ஆனால், விராட் கோலியைப் பொறுத்தவரை சதமடிக்காமல் இருந்தால்தான் அது செய்தி.
அதுபோல ஒரு செய்தியில் இன்று இடம்பிடித்துள்ளார் விராட் கோலி.
மும்பை ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு, இந்த வருடம் ஒருநாள் ஆட்டங்களில் விராட் கோலி எடுத்த ரன்கள்: 112, 46*, 160*, 75, 36, 129*, 75, 45, 71, 140, 157*, 107.
இந்நிலையில் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தால் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையை இலங்கையின் சங்கக்காராவுடன் பகிர்ந்துகொள்வார் கோலி. 2015 உலகக்கோப்பையில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் சங்கக்காரா. அதுவும் தனது கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் நான்கில் சதம் அடித்து மிகக் கெளரவமாக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்து உலக சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி எதிர்பாராதவிதமாக 16 ரன்களில் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பை இழந்தார் கோலி. இந்தமுறையும் கோலியின் சதத்தையும் உலக சாதனையையும் எதிர்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.
இந்நிலையில் கோலியுடன் சேர்த்து ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்வர், கிப்ஸ், டி வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், டெய்லர், பாபர் அஸாம், பேர்ஸ்டோவ் என 9 வீரர்கள் தொடர்ச்சியாக 3 ஒருநாள் சதங்கள் எடுத்துள்ளார்கள்.