5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின.
இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. தவன் 1, புஜாரா, கோலி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் 46, ரஹானே 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது குக்குக்கு இங்கிலாந்து ஊடகர்கள், 33 டெஸ்ட் சதங்கள் அடித்ததற்காக 33 பீர் பாட்டில்களைப் பரிசாக வழங்கினார்கள். ஒவ்வொரு பீர் பாட்டிலிலும் குக்குக்கென தனிக் கடிதம் ஊடகர்களால் எழுதப்பட்டிருந்தன. தனக்குப் பரிசு வழங்கிய ஊடகர்களுக்கு குக் நன்றி தெரிவித்தார்.