யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடுவருடன் ஏற்பட்ட பிரச்னையில் செரீனாவுக்கு மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) ஆதரவு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு ஜப்பான் வீராங்கனை ஒஸாகாவுடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் விளையாடிய போது, அவரது பயிற்சியாளர் ஆட்ட உத்திகளை கூறினார். இது விதிமீறலாகும் என ஆட்ட நடுவர் கார்லோஸ் கூறி செரீனா மீது மூன்று விதிமீறல் புகார்களை பதிவு செய்தார். மேலும் ஒஸாகாவுக்கு 2 புள்ளிகளை அளித்ததால், அவர் எளிதில் வெற்றி பெறும்
நிலை ஏற்பட்டது. இதனால் கொதிப்படைந்த செரீனா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டென்னிஸ் மட்டையை போட்டு உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை அளிக்காமல் விட்டுவிடுவர். மேலும் நடுவரை திருடர் எனவும், பெண்களை பாரபட்சமாக பாலியல் ரீதியில் அணுகுகின்றனர் எனவும் செரீனா புகார் கூறியிருந்தார். இந்நிலையில் டபிள்யுடிஏ தலைமை செயல் அலுவலர் ஸ்டீவ் சைமன் கூறுகையில்: இந்த விவகாரத்தில் செரீனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ஆடவருக்கும், மகளிருக்கும் இடையே விதிமீறல் தொடர்பாக வெவ்வேறு நிலைபாடுகள் எடுக்கப்படுகிறதா என்பது தற்போதுள்ள கேள்வியாகும். சகிப்புத் தன்மைக்கு பாலின பாகுபாடு கூடாது. பயிற்சியாளர் மாடத்தில் இருந்த அவரது பயிற்சியாளர் ஆட்ட உத்திகளை கூறிய போது செரீனா பார்த்தாரா என்பது கூட தெரியவில்லை. இதற்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார் சைமன்.