இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.
கடந்த 3 மாதங்களாக இங்கிலாந்தில் டி 20, ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்டை 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 4-1 என வென்றது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கோலியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
இந்திய அணி மிகவும் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுகிறது. ஆனால் கடந்த 15 வருடங்களில் இதுவே சிறந்த அணி போன்ற குறிப்புகள் உங்கள் அணி மீது கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதா? அல்லது நீங்கள் அதுபோல எண்ணுகிறீர்களா?
கோலியின் பதில்: நாங்கள் சிறந்த அணி என நம்பிக்கை வைக்கவேண்டும்.
ஆனால் கடந்த 15 வருடங்களில் இதுதான் சிறந்த இந்திய அணியா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எனக்கு அப்படித் தோன்றவில்லை.
உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை? அது உங்களது கருத்து, நன்றி என்று பதிலளித்தார் கோலி.