ஆசிய கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா?

ஐக்கிய அரபு நாடுகளில் சனிக்கிழமை தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு
துபையில் ஆசிய கோப்பையுடன் போட்டியில் பங்கேற்கும் 6 நாடுகளின் கேப்டன்கள்.
துபையில் ஆசிய கோப்பையுடன் போட்டியில் பங்கேற்கும் 6 நாடுகளின் கேப்டன்கள்.

இன்று தொடக்கம்
ஐக்கிய அரபு நாடுகளில் சனிக்கிழமை தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட்டின் முதன்மை இடத்தை பெறும் நாடு எது என்பதை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளின் துபை, அபுதாபி நகரங்களில் வரும் 28-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை இழந்த நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா இதில் பங்கேற்கிறது. மேலும் அதிரடி பேட்ஸ்மேன், கேப்டன் கோலி இல்லாமல் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் கலந்து கொள்கிறது. ஆட்ட சுமை காரணமாக கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
கோலி இல்லாத சூழலை இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளும் எனத் தெரியாத நிலையில், ரோஹித் சர்மா, தோனி, தவன், போன்ற மூத்த வீரர்களும், இளம் வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் நிலவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரச்னை, தோனிக்கு இணை வீரர் போன்றவை அணி நிர்வாகத்தை கவலை கொள்ளச் செய்துள்ளன. 
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி புத்துணர்வு பெற்று எழுச்சியுடன் காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மொஹமது ஆமீர், ஆல்ரவுண்டர் ஹாசன் அலி, தொடக்க வீரர் பாகர் ரஹ்மான், பாபர் ஆஸம், ஹாரிஸ் சோஹைல் போன்றவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். அவர்களை எதிர்கொள்வது இந்திய அணிக்கு சிக்கலாக இருக்கும். மேலும் இந்தியாவைக் காட்டிலும், பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு ஆட்டங்களில் பங்கேற்று விளையாடியுள்ளது. சொந்த மைதானம் போல் விளங்குவது அதற்கு கூடுதல் பலமாகும்.
அதே நேரத்தில் வங்கதேசம் தொடர்ந்து ஒரு நாள் ஆட்டங்களில் மேம்பட்டு விளையாடி வருகிறது. மொர்டாஸா தலைமையின் கீழ் சிறந்த பெளலர்களுடன் உள்ளது. தமீம் இக்பால், மமுத்துல்லா, முஸ்தபிஸுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளது இதற்கு சாதகமான அம்சம்.
இலங்கை அணி தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, பெரைரா, மலிங்கா, இளம் வீரர்கள் அகில் தனஞ்செயா, தாசுன் ஷனகா, கசுன் ரஜிதா போன்றோர் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். ஆனால் இலங்கையின் ஆட்டம் தொடர்ந்து ஓரே மாதிரியாக இல்லாத நிலை உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி டி 20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், மொஹமது ஷசாத் போன்றோர் எதிரணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள். ஆப்கானிஸ்தானும் எதிரணிகளுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் சிறப்பான அணியாக உள்ளது.
ஹாங்காங் அணி தொடர்ந்து ஒருநாள் போட்டி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் போட்டியில் பங்கேற்கும் ஆறாவது அணியாகும்.

சரியான அணியை கட்டமைக்க வாய்ப்பு: ரோஹித் 
உலகக் கோப்பை 2019 போட்டிக்கு சரியான அணியை கட்டமைக்கும் வாய்ப்பாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமையும் என எதிர்பார்ப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 2019 மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடக்கிறது. அதற்கு ஒவ்வொரு நாடும் சரியான அணியை அனுப்ப தான் முனையும். இதற்கு தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் சிறந்த வாய்ப்பாக உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் இத்தகைய வாய்ப்பை பெறும். எனினும் முதலில் ஆசிய கோப்பை போட்டியில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
இதர அணிகளின் பலம், பலவீனங்களை போட்டியின் இடையே அறிந்து கொள்வோம். உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறுவதற்காக வீரர்கள் காத்துள்ளனர். சரியான அணியை இதன் மூலம் கட்டமைக்க முடியும்.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதே எனக் கேட்டபோது, அது வழக்கமாக நடைபெறும் ஆட்டங்களில் ஒன்றை போல் தான் கருத வேண்டும். கோப்பையை தக்க வைக்கவே கவனம் செலுத்துவோம், முதன்முறையாக நான் முழு போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்வை தருகிறது. வானிலையும் கவலை தரும் அம்சமாக உள்ளது என்றார்.
உதவிக்கு இந்திய ஏ அணி பெளலர்கள்: ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு உதவும் வகையில் ஏ அணியைச் சேர்ந்த 5 பெளலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவேஷ்கான், பிரசித் கிருஷ்ணா, சித்தார்த் கெளல், ஷாபாஸ் நதீம், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு உதவியாக பந்துவீசுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com