நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், பெங்களூரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை. முதலில் ஆடிய பெங்களூரு 171/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 172/5 ரன்களை எடுத்து வென்றது. ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 37 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெற்றிக்கு வித்திட்டார்.
இதையடுத்து மீதமுள்ள ஆறு ஆட்டங்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி. 14 புள்ளிகள் எடுத்தால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற ஓரளவு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் 14 புள்ளிகள் எடுத்து பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாத அணிகளும் உண்டு. எனவே 16 புள்ளிகள் எடுத்தால் மட்டுமே பிளேஆஃப் நிச்சயம் என்கிற நிலையே ஐபிஎல் போட்டியில் உள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹால் தங்களது அணிக்கான ஃபிளேஆஃப் வாய்ப்பு குறித்துக் கூறியதாவது:
மீதமுள்ள ஆறு ஆட்டங்களையும் வென்றால் எங்களால் ஃபிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியும். கடந்த வருடம் 14 புள்ளிகளுடன் ஓர் அணி தகுதி பெற்றுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாததால் நாங்களும் போட்டியில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.