கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று அந்த அணியில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் புகழாரம் சூட்டினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் விளையாடி 6 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணி 170 ரன்களை மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்களில் எடுக்க முடிந்தது.
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 47 பந்துகளில் 52 ரன்கள் பதிவு செய்தார். டேவிட் மில்லர் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் 4 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார் அஸ்வின். 4 ஓவர்கள் வீசிய அவர் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில், டேவிட் மில்லர் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார் அஸ்வின் என்றார்.
காயமடைந்த வீரர்களான ஹென்ரிக்ஸ், முஜீப் அர் ரகுமான் ஆகியோர் குறித்து கூறுகையில், அவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள் என்றார்.