இந்திய ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் மே.இ. தீவுகள் ஏ அணி சிறப்பாக பேட்டிங் செய்து முதல் நாளன்று 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. 40 ஓவர் வரை இந்திய ஏ அணியால் முதல் விக்கெட்டை எடுக்கமுடியவில்லை. கேப்டன் கிரைக் பிராத்வெயிட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஹாட்ஜ், ப்ரூக்ஸ் ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். ஒருகட்டத்தில் 196 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் டெளரிச், ரீஃபர் ஆகியோர் முறையே 24, 27 ரன்கள் எடுத்து முதல் நாள் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
முதல் நாளன்று மே.இ. தீவுகள் ஏ அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய ஏ அணி தரப்பில் சிராஜ், சந்தீப் வாரியர், டுபே, கெளதம், மார்கண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.