முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த 2-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கேப்டன் கோலி.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் வீரர் ஹோல்டர் வீசிய 32-ஆவது ஓவரில் இந்த சிறப்பைப் பெற்றார் கோலி. முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி 311 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 11,363 ரன்களை விளாசி அதிக ரன்கள் பெற்ற 2-ஆவது இந்தியர் என்ற நிலையில் இருந்தார். ஆனால் கோலி 238 ஆட்டங்களிலேயே 11,406 ரன்களை விளாசி இச்சாதனையை தகர்த்துள்ளார்.
சச்சின் 18,426 ரன்கள்: ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் ஆட்டங்களில் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரது 49 ஒருநாள் சதங்கள் சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் 7 சதங்கள் தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது.