கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மாண்ட்ரியலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் நடால் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் 35-ஆவது மாஸ்டர்ஸ் பட்டமாகும்.
ஆன்ட்ரிஸ்கு சாம்பியன்: டொரோண்டோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு 3-1 என்ற புள்ளிக் கணக்கில் செரீனா வில்லியம்ஸனை விட முன்னிலையில் இருந்தார். ஆனால் 4 கேம்களுக்கு பின் உடல்நிலை பாதிப்பால் ஆட முடியாமல் செரீனா விலகிக் கொண்டார்.
இதையடுத்து 50 ஆண்டுகளில் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கனடிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஆன்ட்ரிஸ்கு.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் உடல்தகுதியைக் கருதி பங்கேற்கப் போவதில்லை என சாம்பியன்கள் நடால், ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.