தூதரக அதிகாரிகள் அவமதித்த விவகாரம் தொடர்பாக உடனே நாடு திரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியத்துக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 முதல் இந்திய அணியின் நிர்வாக மேலாளராக உள்ளார் சுனில். தமிழக அணியின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னரான அவர், அஸ்வினின் தனி பயிற்சியாளராகவும் இருந்தவர்.
இந்நிலையில் தற்போது மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து போட்டிகளில் ஆடி வருகிறது இந்திய அணி. இதற்கிடையே நீர் சேமிப்பு தொடர்பாக கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரைக் கொண்டு குறும்படம் ஒன்றை தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் நிர்வாக மேலாளர் சுனிலை அணுகிய போது, அவர்களுக்கு உரிய பதில் தராமல் அவமதித்தாராம்.
மேலும் உயரதிகாரி ஒருவர் தொடர்பு கொண்ட போது, எனக்கு செய்திகளை அனுப்ப வேண்டும் என கடுமையாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் மத்திய அரசு மூலம் பிசிசிû சிஓஏ வினோத் ராய்க்கு தெரிவிக்கப்பட்டது. சுனில் சுப்பிரமணியனின் செயல்பாடுக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் நீர் சேமிப்பு தொடர்பான குறும்படம் எடுக்கப்பட்டது. இதற்கிடையே நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியத்தை அடுத்த விமானத்திலேயே நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி முன்பு நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற மன்னிப்பு:
பிசிசிஐக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனது மோசமான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். தூக்கமின்மை, அழுத்தம் காரணமாக தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.