புரோ கபடி லீக் 5-ஆம் கட்டப் போட்டிகள் சனிக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்குகின்றன.
இதில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புரோ கபடி லீக் போட்டியின் ஹைதராபாத், மும்பை, பாட்னா, ஆமதாபாத் என 4 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை 5-ஆம் கட்டப் போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் இ.பாஸ்கரன் வெள்ளிக்கிழமை கூறியது:
பிகேஎல் 7-ஆவது சீசன் எங்கள் அணிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. சொந்த மைதானத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவோம்.
ஏற்கெனவே 3 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளோம். ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. 2 ஆட்டங்களில் எங்கள் தவறுகளாலேயே தோல்வி கண்டோம். 12 அணிகளும் சமபலத்துடன் உள்ளன. எந்த அணி களத்தில் சிறப்பாக ஆடுகிறதோ அது வெற்றியை ஈட்டுகிறது.
அணியின் வீரர்கள் முழு உடல்தகுதியுடன் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
மூத்த வீரர்கள் ராகுல் செளதரி, ஷபீர் பாபு கூறியதாவது: சொந்த மைதானத்தில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறோம். இதில் வெற்றி பெற்று, அடுத்த 3 ஆட்டங்களிலும் வெல்வோம். சென்னை ரசிகர்கள் உற்சாகமாக ஆதரவு தருகின்றனர்.
வீரர்கள் உடல்தகுதியை பேண முக்கியத்துவம் தருகிறோம். டிபன்ஸ், ரைடிங் வீரர்கள் தயாராக உள்ளனர் எனத் தெரிவித்தனர்.