இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று நாள்கள் பயிற்சி ஆட்டம் கூலிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 88.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. புஜாரா சதமடித்தார். ரோஹித் சர்மா 68 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் ஏ அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 56.1 ஓவர்களில் 181 ரன்களுக்குச் சுருண்டது. தொடக்க வீரர் ஹோட்ஜ் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் இஷாந்த், உமேஷ் யாதவ், குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
2-ம் நாளின் முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 20, விஹாரி 48 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
ஆகஸ்ட் 22 முதல் இந்தியா - மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.