இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 2-ஆவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸி. 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 258 ரன்களுக்கும், ஆஸி. 250 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஐந்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. 48 ஓவர்களில் 267 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது.
இந்த டெஸ்ட் ஆட்டத்தில் ஆக்ரோஷமான பந்துவீச்சின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர். அதிவேகப் பந்துவீச்சினாலும் பவுன்சர் பந்துகளாலும் ஆஸி. அணி வீரர்கள் ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டார்கள். ஆர்ச்சரின் பவுன்சர் பந்தில் காயமடைந்து ஆட்டத்திலிருந்து வெளியேறினார் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஆர்ச்சர்.
இதற்கு நிகராக அறிமுக டெஸ்டிலேயே முத்திரை பதித்த பந்துவீச்சாளர் வேறு யாரேனும் உண்டா என்கிற கிரிக்கெட் ரசிகர்களிடம் கேட்டது ஐசிசி. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆர்ச்சரின் வரவு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.