ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுன்சரால் காயமடைந்த ஆஸி. வீரர் ஸ்மித், ஆஷஸ் தொடர் 3-ஆவது டெஸ்டில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-ஆஸி. அணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஆட்டம் நடைபெற்றது. இதில் 92 ரன்களை விளாசிய ஸ்மித், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பவுன்சரால் தலையில் காயமடைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவ குழுவினர் அவரை அழைத்துச் சென்றனர்.
ஹெட்டிங்லியில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் அவர் ஆட மாட்டார் என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை வீரர்கள் பயிற்சியின் போது ஸ்மித் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்டில் 2 சதங்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்ட ஸ்மித், இரண்டாவது ஆட்டத்திலும் 92 ரன்களை விளாசினார். ஹெல்மட் அணிந்தாலும், கழுத்து கவசம் அணியாததால் ஸ்மித் காயமடைந்தார். அவருக்கு, மாற்று வீரராக மார்னஸ் லேபுஸ்சேன் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தலை அல்லது கழுத்தில் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கும் புதிய முறைக்கு ஐசிசி அனுமதி தந்துள்ளது.