உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை சாம்பியன் லின் டேனை அதிர்ச்சி தோல்வியடையச் செய்தார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 2 முறை ஒலிம்பிக் மற்றும் 5 முறை உலக சாம்பியன் சீனாவின் லின்டேனுடன் மோதினார் பிரணாய். 1 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-11, 13-21, 21-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்று ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றார் பிரணாய்.
அதில் முதல்நிலை வீரர் கென்டோ மொமடோவை எதிர்கொள்வார் எனத்தெரிகிறது. ஆடவர் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-16, 21-15 என்ற கேம் கணக்கில் லீ டோங்கை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றார்.
முன்னணி வீரரான கே.ஸ்ரீகாந்த் 17-21, 21-16, 21-6 என்ற கேம் கணக்கில் எதிராளியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி இணை எதிரணியினர் வாக் ஓவர் செய்ததால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.