கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள கொச்சியில் ஸ்ரீசாந்தின் வீடு உள்ளது. அங்கு மனைவி, குழந்தைகளுடன் அவர் வசித்து வருகிறார்.
காலை 2 மணிக்கு ஸ்ரீசாந்தின் வீட்டில் உள்ள தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் ஸ்ரீசாந்தின் மனைவி, குழந்தை மற்றும் இரு உதவியாளர்கள் ஆகியோர் முதல் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சம்பவம் நடந்த போது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை.
ஸ்ரீசாந்த் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். முதல் மாடியில் மாட்டிக்கொண்டவர்களையும் அவர்கள்தான் காப்பாற்றியுள்ளார்கள். படிக்கட்டு வழியாகச் சென்று ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று முதல் தளத்தில் இருந்த ஸ்ரீசாந்தின் மனைவி உள்ளிட்ட நால்வரைத் தீயணைப்பு படையினர் காப்பாற்றியுள்ளார்கள். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடைக்காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே.ஜெயின் (நீதிபதி ஓய்வு) சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால் வரும் 2020 செப்டம்பர் மாதத்துடன் அவரது தடைக்காலம் முடிவடைகிறது. அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம்.