பேஸல் (ஸ்விட்சர்லாந்து): உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனையை தோற்கடித்து இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் 40 நிமிடங்களில் எளிதாக வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் சிந்து.
ஏற்கெனவே அவர் கடந்த 2 உலக சாம்பியன் போட்டிகளிலும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் ஒகுஹராவை அவர் எதிர்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜப்பானிய வீராங்கனை நாசோமி ஒகுஹராவை அவர் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் எளிதாகத் தோற்கடித்தார்.
இதன்மூலம் முதல் இரண்டு முயற்சிகளில் தவற விட்ட தங்கத்தை மூன்றாவது முறையாக எட்டிப்பிடித்து அவர் வரலாற்று சாதனை படைத்தார்.