35.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய ஏ அணி. மிச்சம் இரு ஆல்ரவுண்டர்கள் மட்டுமே. தென் ஆப்பிரிக்க ஏ அணி மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் அந்த இரு ஆல்ரவுண்டர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இந்திய ஏ அணிக்கு அபார வெற்றியை வழங்கியுள்ளார்கள்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய ஏ அணி, 47 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் ஒருவரும் அரை சதம் எடுக்கவில்லை. ஆனாலும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிவம் டுபேவும் அக்ஷர் படேலும் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு அதிர்ச்சியளித்தார்கள். ஷிவம் டுபே 60 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் அக்ஷர் படேல் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதன்பிறகு விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணியில் தொடக்க வீரர் ஹெண்டிரிக்ஸ் பொறுப்புடன் விளையாடி 108 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் கிளாசென் 58 ரன்கள் எடுத்தார். தெ.ஆ. ஏ அணி, 45 ஓவர்களில் 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் சஹால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி அதிகாரபூர்வமற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.