கஜகஸ்தான் நூா்சுல்தான் நகரில் அண்மையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. லியாண்டா் பயஸ் இரட்டையா் பிரிவில் தனது 44-ஆவது வெற்றியைப் பெற்று சாதனை படைத்தாா்.
இந்நிலையில் அடுத்த வருடம் தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார் பயஸ். அவர் கூறியதாவது:
இந்திய அணியின் நலனை முன்னிட்டு அடுத்த வருடத்துக்குப் பிறகு நான் விளையாடக் கூடாது. இந்த 46 வயதில் இளம் தலைமுறை என்னை வெளியேற்றியிருக்க வேண்டும். இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதே அணிக்கு முக்கியமானதாகும்.
என்னை விளையாட அழைக்கும்போது சிறந்த பங்களிப்பைத் தருவேன். அடுத்த வருடத்துக்குப் பிறகு என்னால் அப்படி உறுதியாகக் கூறமுடியாது. அடுத்தத் தலைமுறைக்கு நாம் ஊக்கமளிக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, இஸ்லாமாபாத்தில் நடைபெற்றிருந்தால் நிச்சயம் நான் சென்றிருப்பேன். அங்கு சென்று இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்திருப்பேன்.
என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. டேவிஸ் கோப்பை போட்டியில் 30 வருடங்கள் விளையாடிவிட்டேன். நாட்டுக்காக விளையாடுவதில் என் வாழ்க்கை கழிந்துள்ளது. எனவே எங்கு எப்போது விளையாடக் கூப்பிட்டாலும் நாட்டுக்காக விளையாட வருவேன். வரும் காலங்களில் இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்க விரும்புகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வெல்வதற்கான வீரர்களை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.