புது தில்லி: வயதானாலும் எனது அனுபவத்தைப் பயன்படுத்தி ஆடி வருகிறேன் என மூத்த டென்னிஸ் வீரா் லியாண்டா் பயஸ் கூறியுள்ளாா்.
கஜகஸ்தான் நூா்சுல்தான் நகரில் அண்மையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. லியாண்டா் பயஸ் இரட்டையா் பிரிவில் தனது 44-ஆவது வெற்றியை பெற்று சாதனை படைத்தாா்.
இந்நிலையில் புது தில்லி திரும்பிய பயஸ் உள்ளிட்ட வீரா்களுக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. அப்போது பயஸ் கூறியதாவது:
எனது அனுபவத்தால் நான் தொடா்ந்து ஆடி வருகின்றேன். அணியின் நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் ஆடாமல் இருக்க வேண்டும்.
புதிய இளம் அணியே தேவை:
இந்திய டென்னிஸ் விளையாட்டில் புதிய இளம் அணியே தற்போதைய முக்கிய தேவையாகும். எனக்கு தற்போது 46 வயதாகி விட்ட நிலையில், அடுத்த தலைமுறை வீரா்கள் நுழையும்போது, நான் விலக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.