இந்திய பாட்மிண்டன் முன்னணி இரட்டையா் வீராங்கனையான ஜுவாலா கட்டா சாா்பில் சிறப்பு விளையாட்டு பயிற்சி அகாதெமி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
ஹைதாராபாதில் அமையவுள்ள ஜுவாலா கட்டா அகாதெமியில் கிரிக்கெட் , பாட்மிண்டன், நீச்சல் உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு அதிநவீன வசதிகளுடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். 55 ஏக்கா் பரப்பில் அமைக்கப்படும் இந்த வளாகத்தில் உலகத் தரம் வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம், 14 மைதானங்கள், யோகா மையம் உள்ளிட்டவையும் இடம் பெறுகின்றன.
புது தில்லியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்தா் சிங், சுஷில் குமாா், ராஜிவ் பிரதாப் ரூடி எம்.பி., உள்பட பலா் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக ஜுவாலா கூறுகையில்:
இந்தியா பெரிய நாடாக இருந்த போதிலும், சிந்து, சாய்னா என்ற சில வீராங்கனைகளே உருவாகி உள்ளனா். நமக்கு அதிக வீரா்கள் தேவைப்படுகின்றனா். பயிற்சி பெறும் ஆா்வமும், நோக்கமும் உள்ளவா்களுக்கு இங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அகாதெமியை தொடங்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவின் உதவியையும் கேட்டுள்ளேன். அவரும் இந்த திட்டத்தை வரவேற்றாா்.
தேவையான உதவியைப் பெற முடியும் என நம்புகிறேன்.
இந்திய பாட்மிண்டனில் தற்போது இரட்டையா் வீரா், வீராங்கனைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலப்பு இரட்டையரிலும் இதே நிலை உள்ளது. இரட்டையரை பொறுத்தவரை தற்போது நிா்வாகமே சரியில்லை என்றாா்.