இந்திய கிரிக்கெட் அணியில் திறமைசாலிகள் இடம்பெறவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஹர்பஜன் சிங். பல இளம் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக தன் ட்விட்டர் கணக்கு வழியாக அவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பார். தற்போது, 29 வயது மும்பை வீரரான சூர்ய குமார் யாதவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்.
ட்விட்டரில், ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இந்தியா, இந்தியா ஏ, இந்தியா பி அணிகளுக்குத் தேர்வானவர்களைப் போல ரன்களைக் குவிப்பதைத் தவிர சூர்ய குமார் யாதவ் என்ன தவறு செய்தார் என எண்ணிப் பார்க்கிறேன். ஏன் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அடுத்த மாதம், இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஒருநாள் மற்றும் நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்தியா ஏ ஒருநாள் அணியில் சூர்ய குமார் யாதவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.