டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் 2020-ஆம் ஆண்டுடன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவில் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில டென்னிஸ் தொடர்களில் பங்கேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அணியுடன் பயணித்து உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடனும் கொண்டாடுவதை எதிர்நோக்கி இருப்பதாக அதில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டை அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ஆண்டாக எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
1991-ஆம் ஆண்டு டென்னிஸ் உலகில் அடியெடுத்து வைத்தார் லியண்டர் பயஸ். இதன்மூலம், 2020-ஆம் ஆண்டுடன் அவர் டென்னிஸில் 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் இந்திய டென்னிஸின் முகமாக இருந்த பயஸ், இரட்டையர் பிரிவு டென்னிஸில் தலைசிறந்த வீரராவார். இவர் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் ஆடவர் இரட்டையரில் 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்.
1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியர் மற்றும் ஒரே இந்தியர் லியாண்டர் பயஸ் ஆவார். இவர் அண்மையில் டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்பே, அடுத்த ஆண்டுடன் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அடுத்த வருடம் ஓய்வு பெறப்போவதாக லியாண்டர் பயஸ் அறிவிப்பு!