அஸ்வின், ஜடேஜாவை விடவும் வெளிநாடுகளில் குல்தீப் யாதவ் தான் இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என ரவி சாஸ்திரி அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார்.
இணைய இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிட்னி டெஸ்டில் குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட், முக்கியமாக வெளிநாட்டு டெஸ்டுகளில் மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சின் காலமாகத்தான் இனி இருக்கப்போகிறது. சிட்னியில் அவர் பந்துவீசிய விதத்தின்மூலம், வெளிநாட்டு டெஸ்டுகளில் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் உருவாகியுள்ளார்.
ஆமாம். அதற்குள் அஸ்வின், ஜடேஜாவைக் காட்டிலும் அவரே பிரதான சுழற்பந்துவீச்சாளர். வெளிநாட்டு டெஸ்டில் விளையாடி, 5 விக்கெட்டுகளை குல்தீப் எடுத்துள்ளதால் அவரே வெளிநாடுகளில் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளர். இன்னும் சொல்லவேண்டும் என்றால், வெளிநாடுகளில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டும் விளையாடவைக்க முடியும் எனும்போது அவர்தான் தேர்வாவார். எல்லாவற்றுக்கும் ஒரு கால அளவு உள்ளது (2018-ல் அஸ்வினின் மோசமான உடற்தகுதியை முன்வைத்து). இப்போது, வெளிநாடுகளில் குல்தீப் தான் நம்முடைய முக்கியமான பந்துவீச்சாளர் என்று கூறியுள்ளார்.