மகளிர் டி20 கிரிக்கெட்: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி

இந்திய ஆடவர் அணியைப் போல் மகளிர் அணியும் முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது.
மகளிர் டி20 கிரிக்கெட்: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி


இந்திய ஆடவர் அணியைப் போல் மகளிர் அணியும் முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் பதிவு செய்தது.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தனது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது நியூஸிலாந்து.
தொடக்க ஆட்டக்காரர்களாக சுஸி பேட்ஸ், சோபி டிவைன் ஆகியோர் களம் இறங்கினர்.
2ஆவது ஓவரில் ராதா யாதவ் வீசிய பந்தில் தனியா படியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுஸி பேட்ஸ். பின்னர், கெயிட்லின் குர்ரே களம் இறங்கி பவுண்டரிகளை விளாசினார்.
6.6ஆவது ஓவரில் அவரை போல்டு' ஆக்கினார் பூணம் யாதவ். அப்போது அவர் 15 ரன்கள் எடுத்திருந்தார். மறுபக்கம் சோபி அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார். அவருக்கு கேப்டன் எமி சாட்டர்வைட் தோள் கொடுத்தார்.
அணி 116 ரன்கள் எடுத்திருந்தபோது சோபி டிவைன் 62 ரன்களில் அருந்ததி ரெட்டி பந்துவீச்சில் தீப்தி சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் எமி (27 பந்துகளில் 33 ரன்)  தீப்தி சர்மா பந்துவீச்சில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.
விக்கெட் கீப்பர் காடே மார்டின் (14 பந்துகளில் 27 ரன்), ஃபிரான்சிஸ் மாக்கே (10 ரன்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவ்வாறாக 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை அந்த அணி குவித்தது.
இந்திய அணியின் சார்பில், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், தீப்தி சர்மா, பூணம் யாதவ் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
160 ரன்கள் இலக்கு: 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்தியா.
தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 34 பந்துகளில் 58 ரன்கள் பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெமிமா ராட்ரிஜ் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 17 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் ஆனார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறாக 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 136 ரன்கள் எடுத்தது. லீ டகுஹு 3 விக்கெட்டுகளையும், எல்.காஸ்பரெக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஒரு நாள் தொடரை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com