ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியுள்ளது.
ரஹானே தலமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 15 ரன்களில் குர்பானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் - விஹாரி சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தார்கள். 171 ரன்கள் வரை இவர்களைப் பிரிக்கமுடியவில்லை. இதன்பிறகு சதத்தை நெருங்கிய மயங்க் அகர்வால், 95 ரன்களில் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த யாரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கேப்டன் ரஹானே 13, ஸ்ரேயஸ் ஐயர் 19, இஷான் கிஷன் 2 ரன்களுடன் வெளியேறினார்கள். இதனால் ஒருகட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் மறுமுனையில் விஹாரி தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சதமடித்த பிறகு 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய டெஸ்ட் அணி வீரர்களான விஹாரியும் மயங்க் அகர்வாலும் தங்களது திறமைகளை இந்த ஆட்டத்திலும் நிரூபித்துள்ளார்கள்.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விதர்பாவின் சர்வேட், வாகரே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.