மைசூரில் நடைபெற்று வரும் அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்டில் இந்திய ஏ வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்துள்ளார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ராகுலும் அபிமன்யு ஈஸ்வரனும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 55 ஓவர்கள் வரை இவர்களைப் பிரிக்கமுடியவில்லை. ரன்கள் எடுத்துத் தன் திறமையை மீண்டும் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கே.எல். ராகுல் 166 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 23 வயது வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து தனது முத்திரையைப் பதித்தார். 222 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாளின் இறுதிக்கட்டத்தில் பிரியங் பஞ்சல் 50 ரன்களில் பெய்லி பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது.