ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் துவக்க நாளான செவ்வாய்க்கிழமை ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை எடுத்து ஆதிக்கம் செலுத்தியது.
ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியுடன், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையே இரானி கோப்பை போட்டி நடைபெறுவது வழக்கம்.
வரும் மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அணிக்கான தேர்வாகவும் அமைந்துள்ளது.
நாக்பூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங் களமிறங்கினர். இதில் 15 ரன்களுடன் அன்மோல்ப்ரீத் அவுட்டானார்.
மயங்க்-ஹனுமா அபாரம்
பின்னர் மயங்க்-ஹனுமா விஹாரி இணை அபாரமாக ஆடி விதர்பாவின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
3 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 134 பந்துகளில் 95 ரன்களை எடுத்து மயங்க் அகர்வால் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன ரஹானே 13, ஷிரேயஸ் ஐயர் 19, இஷான் கிஷான் 2, கிருஷ்ணப்ப கெளதம் 7, தர்மேந்திர சிங் ஜடேஜா 6 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
சிறப்பாக ஆடி வந்த இளம் வீரர் ஹனுமா 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 211 பந்துகளில் 114 ரன்களுக்கு அவுட்டானார்.
கடைசி விக்கெட்டுக்கு ராகுல் சஹார் 22, அங்கிட் ராஜ்புத் 25 ரன்களை விளாசி ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 89.4 ஓவர்களில் 330 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது ரெஸ்ட் ஆஃப் இந்தியா.
விதர்பா தரப்பில் அக்ஷய் வாக்ரே 3-62, ஆதித்ய சர்வேட் 3-99, ரஜ்னிஷ் குர்பானி 2-58 விக்கெட்டை சாய்த்தனர்.