திருச்சி தூய வளனார் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தூய வளனார் கல்வி நிறுவனங்களின் 175ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு கால்பந்து போட்டிகளை மாநில அளவில் நடத்துகின்றன. இதன் தொடக்க விழாவுக்கு, தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் அந்தோனி பாப்பு ராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் வாழ்த்திப் பேசினர். வாசன் எஸ்டேட்ஸ் நிறுவனத் தலைவர் ரவி முருகையா, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
முதல்நாள் நடைபெற்ற போட்டிகளில் தூய வளனார் கல்லூரி மஞ்சள் அணியும், தேசியக் கல்லூரி அணியும் மோதின. இதில், 3 கோல்கள் அடித்து தூய வளனார் கல்லூரி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி அணியும், கோவை ரத்தினம் கல்லூரி அணியும் மோதின. இதில், 2 கோல்கள் அடித்து பிஷப்ஹீபர் கல்லூரி வெற்றி பெற்றது. தூய வளனார் கல்லூரியின் மெரூன் அணியும், நேரு நினைவுக் கல்லூரியும் மோதிய போட்டியில் 4 கோல்கள் அடித்து தூய வளனார் கல்லூரி வெற்றி பெற்றது. இதேபோல, மதுரை அருளானந்தர் கல்லூரி அணியும், கோவை விஎல்பி ஜானகி அம்மாள் கல்லூரி அணியும் மோதிய போட்டியில் ஒரு கோல் அடித்து அருளானந்தர் கல்லூரி வென்றது.