ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். புல்வாமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 40 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரானி கோப்பை போட்டியை வென்றதற்காகக் கிடைத்த பரிசுத் தொகை முழுவதையும் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்ப நலனுக்காக வழங்குவதாக விதர்பா அணி கேப்டன் ஃபயஸ் ஃபஸல் அறிவித்துள்ளார்.
விதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் விதர்பா அணி, இரானி கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.