விதர்பா - ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் விதர்பா அணி, இரானி கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 89.4 ஓவர்களில் 330 ரன்களை எடுத்தது. விஹாரி 114 ரன்களும் மயங்க் அகர்வால் 95 ரன்களும் எடுத்தார்கள். விதர்பா அணி, முதல் இன்னிங்ஸில் 142.1 ஓவர்கள் விளையாடி 425 ரன்கள் எடுத்தது. கர்னேவார் 102 ரன்களும் விக்கெட் கீப்பர் வாட்கர் 73 ரன்களும் எடுத்தார்கள். 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் என்கிற நிலையிலிருந்து முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது விதர்பா அணி. தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விஹாரி 180 ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ரஹானே 87 ரன்கள் எடுத்தார். இதையடுத்து விதர்பா அணிக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் விதர்பா அணி, 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது.
சஞ்சய் 42 ரன்கள் ஆட்டமிழந்தார். எனினும் அதர்வா டைட் மற்றும் கணேஷ் சதீஷ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்கள். அவர்களுடைய பொறுப்பான ஆட்டத்தால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் பந்துவீச்சால் எதுவும் செய்யமுடியாமல் போனது. டைட் 72 ரன்களிலும் கணேஷ் சதீஷ் 87 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கணேஷ் சதீஷின் விக்கெட் விழுந்தவுடன் வெற்றிக்கு இன்னமும் 11 ரன்கள் இருந்த நிலையில் இரு அணி கேப்டன்களும் ஆட்டம் சமனில் முடிவடைய ஒப்புக்கொண்டார்கள்.
எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகித்த காரணத்தால் விதர்பா அணி இரானி கோப்பையை வென்றது. கடந்த வருடமும் இரானி கோப்பையை வென்ற விதர்பா அணி இந்தமுறை அக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
விதர்பாவின் அக்ஷய் கர்னேவார் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.