வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸி. பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 226 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மொகமது மிதுன் 57, சபீர் ரஹ்மான் 43 ரன்களை எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். நியூஸி. தரப்பில் பெர்குஸன் 3, டாட் ஆஸ்ட்லே, நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூஸி. வீரர்கள் மார்ட்டின் கப்டில், கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். ஹென்றி நிக்கோல்ஸ் 14 ரன்களுக்கு வெளியேறினார். 4 சிக்ஸர், 14 பவுண்டரியுடன் 88 பந்துகளில் 118 ரன்களை விளாசினார் கப்டில். கேன் வில்லியம்ஸன் 65 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 21 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில் 36.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 229 ரன்களை எடுத்து வென்றது நியூஸிலாந்து.
இதன் மூலம் தொடரையும் 2-0 என கைப்பற்றியது. மார்ட்டின் கப்டில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.