‘உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு’!

இந்த ஆட்டம் நடைபெறாவிட்டால் உள்ளூர் மக்கள் மட்டுமல்ல உலகளவிலான பார்வையாளர்களும் ஏமாற்றமடைவார்கள்...
‘உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு’!

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். புல்வாமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 40 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் சமீபத்திய காஷ்மீர் தற்கொலைப்படைத் தாக்குதலையடுத்து இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவைப் பொறுத்தே இந்த ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்று சொல்லமுடியும் என ஐபில் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது: இந்தத் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான மக்களை எண்ணி வருந்துகிறோம். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்த நிலைமையை ஆராந்து வருகிறோம். உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறமுடியாத சூழல் தென்படவில்லை. விளையாட்டால் முக்கியமாக கிரிக்கெட்டால் வெவ்வேறு சமூக மக்களை ஒன்றிணைக்கமுடியும். பிரிப்பதற்குப் பதிலாக இணைப்புக்காக கிரிக்கெட்டைப் பயன்படுத்தலாம் என்றார்.

உலகக் கோப்பைப் போட்டியின் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்தி கூறியதாவது: உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் ஜுன் 16 இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குத்தான் அதிக கிராக்கி உள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளைக் கோரி எங்களுக்கு 4 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இந்த எண்ணிக்கை மிகமிக அதிகம். மான்செஸ்டர் மைதானத்தில் 25,000 பேர் தான் அமரமுடியும். எனவே பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்டம் நடைபெறாவிட்டால் உள்ளூர் மக்கள் மட்டுமல்ல உலகளவிலான பார்வையாளர்களும் ஏமாற்றமடைவார்கள். 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளுக்காக 2, 40,000 விண்ணப்பங்கள் வந்தன. இறுதிப்போட்டிக்கு 2,70,000 விண்ணப்பங்கள். (அதாவது இந்தியா - பாகிஸ்தான் போட்டியை விடவும் இறுதிப் போட்டிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைவு). எனவே இந்த எண்ணிக்கைகளைக் கொண்டு இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எந்தளவுக்கு வரவேற்பு உள்ளது என எண்ணிக்கொள்ளலாம் என்றார்.

ஒருவேளை இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட்டால்? ரிச்சர்ட்சனின் பதில்: ஆட்ட விதிமுறைகளின்படி முடிவு எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com