கிரிக்கெட் வீரர்களின் கடும் ஆட்டசுமைக்கு பாதிப்பில்லாத வகையில் ஐபிஎல் 2019 இறுதி மற்றும் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்கள் இடையே போதிய இடைவெளி உள்ளது என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சிஇஓ வெங்கி மைசூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்களுக்கு ஐபிஎல் ஆட்டங்களால் கூடுதல் ஆட்டசுமை ஏற்படாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும் வகையில் ஐபிஎல் இறுதி ஆட்டத்துக்கும், உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்துக்கும் இடையே 3 வார இடைவெளி உள்ளது.
கொல்கத்தா அணியில் இருந்து குல்தீப் யாதவ் உலகக் கோப்பை அணியில் இடம் பெறக்கூடும். வீரர்கள் ஆட்டசுமை மேலாண்மை தொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் இதுவரை வரவில்லை. பொதுத் தேர்தல்களால் ஐபிஎல் ஆட்டங்கள் நடுநிலையான மைதானங்களிலும் நடைபெற வாய்ப்புள்ளது.
கொல்கத்தா அணியின் பயிற்சி மார்ச் இரண்டாவது வாரம் தொடங்கும் என்றார் வெங்கி.