இன்று தொடங்கிய சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பையின் ஷ்ரேயஸ் ஐயர் 55 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிக்கிம் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. ஷ்ரேயஸ் ஐயர் 55 பந்துகளில் 15 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு விளையாடிய சிக்கிம் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் மட்டும் எடுத்து 154 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம் அதிக டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். இதற்கு முன்பு 128 ரன்கள் எடுத்த ரிஷப் பந்தின் சாதனையை அவர் முந்தியுள்ளார். அதேபோல டி20 ஆட்டத்தில் அதிக சிக்ஸர் (15) அடித்த இந்திய வீரர் என்கிற பெருமையையும் ஷ்ரேயஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முரளி விஜய் 11 சிக்ஸர் அடித்ததே சாதனையாக இருந்தது. மேலும் மும்பை அணியின் 258 ரன்கள், இந்தியாவில் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிக டி20 ஸ்கோர் ஆகும்.