சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் குத்துச்சண்டையை மேலும் பிரபலமாக்கி, வலுவான அடித்தளம் அமைக்க ஏதுவாக பவுண்டேஷன் பார் பெட்டர் பாக்ஸிங் என்ற அமைப்பு கடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் அதன் தலைவராக இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுக்காலம் அவர் இப்பதவியை வகிப்பார்.
இதன் உறுப்பினர்களாக ஏஐபிஏ தலைவர் கபூர் ரஹிமோவ், ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர் பிரான்கோ பேல்சினெலி, ஆப்பிரிக்க கூட்டமைப்பு தலைவர் சிடி முகமது, ஏஐபிஏ செயல் இயக்குநர் டாம் விர்ஜெட்ஸ் ஆகியோர் செயல்படுவர்.
இதுதொடர்பாக அஜய் சிங் கூறியதாவது: இந்த நியமனம் எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது, இந்திய குத்துச்சண்டைக்கு கிடைத்த பெரிய கெளரவமாகும். நமது குத்துச்சண்டை வீரர்கள் செயல்பாடு, சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இதற்காக ஏஐபிஏவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குத்துச்சண்டை மேம்பாட்டுக்கு என்னால் ஆன முயற்சியை மேற்கொள்வேன் என்றார்.