தமிழ்நாடு 125/6 (சதுர்வேத் 34, வாஷிங்டன் 33, நாக்வஸ்வல்லா 3-11); குஜராத் 124 (காந்தி 68, வாஷிங்டன் 2-10)
சூரத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் குஜராத் அணியைத் தமிழக அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
டாஸ் வென்ற குஜராத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சதுர்வேத் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். குஜராத்தின் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தமிழக அணி சிறப்பாகப் பந்துவீசியதால் குஜராத் அணி 16.5 ஓவர்களில் 96 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தமிழக அணி எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவானது. ஆனால் கடைசி விக்கெட்டை எடுக்கவிடாமல் காந்தி தமிழக அணிக்குக் கடுமையான நெருக்கடி அளித்தார். இந்நிலையில் கடைசி ஓவரில் கடைசி பேட்ஸ்மேன் படேலை ரன் எதுவுமின்றி ரன் அவுட் செய்து 1 ரன் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி. குஜராத் அணி, 19.5 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற காந்தி, 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் கடுமையாகப் போராடினார். தமிழக அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.