காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து மோசமாகப் பேசியதற்காக மன்னிப்பு கோரினார் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா.
இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும் கேஎல் ராகுலும் பங்கேற்றார்கள். இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? சச்சினா விராட் கோலியா என்கிற கேள்விக்கு இருவருமே விராட் கோலி எனப் பதில் அளித்தார்கள். இதற்குச் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது.
இந்நிலையில் அதே நிகழ்சியில் பெண்கள் குறித்து மோசமாகப் பேசியுள்ளார் பாண்டியா. இதையடுத்துச் சமூகவலைத்தளங்களில் பாண்டியாவுக்கு அதிக எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. மீ டூ இயக்கம் வளர்ந்துவரும் தருணத்தில் பாண்டியா இதுபோல பேசியிருக்கக்கூடாது என்று பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.
இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாண்டியா. காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசியதற்குக் கிடைத்த எதிர்வினைகளைக் கண்டபிறகு என் பேச்சால் எந்தவிதத்தாலும் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்வதோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறியுள்ளார்.