பாண்டியா, ராகுலின் தகாத கருத்துகளை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி திட்டவட்டம்!

தகாத கருத்துகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம். என்ன தவறு நிகழ்ந்தது என இரு வீரர்களும்...
பாண்டியா, ராகுலின் தகாத கருத்துகளை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி திட்டவட்டம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாண்டியா, ராகுல் ஆகியோரின் கருத்துகளை இந்திய அணி ஆதரிக்கவில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தது தொடர்பாக இருவருக்கும் ஆஸி.தொடரில் 2 ஒரு நாள் ஆட்டங்கள் ஆட தடைவிதிக்கலாம் என பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் பரிந்துரைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காஃபி வித் கரன் என்ற பெயரில் உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாண்டியா மற்றும் ராகுல் பங்கேற்றிருந்தனர். அப்போது இரவு விடுதி நிகழ்வுகளை மையப்படுத்தி பெண்கள் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாண்டியா, ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் அதிருப்தியையும், விமர்சனத்தையும் வெளிப்படுத்தினர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்குமாறு பாண்டியா மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ. இதனிடையே, பாண்டியா தனது மன்னிப்பு கோரி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக லோகேஷ் ராகுல் இதுவரை பிசிசிஐ நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக சிஓஏ விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் சிஓஏ தலைவர் வினோத் ராய் இருவருக்கும் 2 ஆட்டங்கள் தடை விதிக்க பரிந்துரைத்தார். மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி, பிசிசிஐ சட்டப்பிரிவின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார். பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரியும் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் எவ்வாறு பங்கேற்றனர் என விசாரணை செய்ய வேண்டும். வீரர்களை அண்டாமல் விளையாட்டு பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைக்கும் நிலையில் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றது வியப்பை தருகிறது என்றார் செளதரி.

இந்நிலையில்  பாண்டியா, ராகுல் ஆகியோரின் கருத்துகளை இந்திய அணி ஆதரிக்கவில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, தகாத கருத்துகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம். என்ன தவறு நிகழ்ந்தது என இரு வீரர்களும் உணர்ந்துள்ளார்கள், இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். நாங்கள் அவர்களுடைய கருத்துகளை ஆதரவளிக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட்டோம். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. இதன் விளைவுகளால் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் மாற்றம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டல் அதற்கேற்றபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோலி கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சிட்னியில் நாளை தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com