289 ரன்கள் இலக்கு: சரிவைத் தடுத்து நிறுத்தி 100 ரன்கள் கூட்டணி அமைத்துள்ள ரோஹித் சர்மா & தோனி!

இந்திய அணி சற்று தடுமாற்றத்துடன் இலக்கை எதிர்கொண்டு வருகிறது.
289 ரன்கள் இலக்கு: சரிவைத் தடுத்து நிறுத்தி 100 ரன்கள் கூட்டணி அமைத்துள்ள ரோஹித் சர்மா & தோனி!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 288 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய அணி சற்று தடுமாற்றத்துடன் இலக்கை எதிர்கொண்டு வருகிறது. 

சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸி. அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஃபிஞ்சை 6 ரன்களில் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். விக்கெட் கீப்பர் கேரி நன்குத் தொடங்கினார். ஆனால், 24 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கவாஜாவும் ஷான் மார்ஷும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். 22.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலிய அணி. 70 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, 59 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

நன்கு விளையாடிய மார்ஷ், 65 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் அதன்பிறகு சிக்ஸ் அடிக்க முயன்று குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அடுத்த 10 ஓவர்களுக்கு ஹேண்ட்ஸ்காம்பும் ஸ்டாய்னிஸூம் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும் சிறிது நேரம் பவுண்டரிகள் எதுவும் அடிக்காமல் ஆடினார்கள். குல்தீப் வீசிய 44-வது ஓவரில் ஸ்டாய்னிஸும் ஹேண்ட்ஸ்காம்பும் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள். அப்போது 45 பந்துகளுக்குப் பிறகுதான் ஒரு பவுண்டரி அடித்தது ஆஸ்திரேலியா. 50 பந்துகளில் அரை சதமெடுத்த ஹேண்ட்ஸ்காம்ப், சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பை உண்டு பண்ணினார். ஆனால் அவர் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்டத்தில் ஸ்டாய்னிஸும் மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ஆஸி. அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் கிடைத்தன. ஸ்டாய்னிஸ் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் புவனேஸ்வர், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்திய அணிக்கு நல்ல தொடக்க அமையவில்லை. டி20 தொடரில் நன்றாக விளையாடிய தவன், ரன் எதுவும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 3 ரன்களில் வெளியேறி மேலும் அதிர்ச்சியளித்தார். இதன்பிறகு ராயுடுவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள் இந்திய ரசிகர்கள். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் தோனியும் பொறுப்புடன் விளையாடி சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பிறகு ரோஹித் சர்மாவும் தோனியும் சிக்ஸர் அடித்தாலும் பவுண்டரி அடிக்கச் சிரமப்பட்டார்கள். இந்திய அணிக்கு முதல் பவுண்டரி 21-வது ஓவரில்தான் கிடைத்தது. 62 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. 22 ஓவர்கள் ஒன்றாக விளையாடி ரோஹித்தும் தோனியும் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இதனால் மிகப்பெரிய ஆபத்திலிருந்து இந்திய அணி தப்பித்துக்கொள்ள இருவரும் உதவினார்கள். 

இந்திய அணி 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 55, தோனி 41 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com