விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கையுந்து பந்து இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், 19-வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே, தேசிய அளவிலான 64-ஆவது கையுந்து பந்துப் போட்டிகள், விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தன.
இதில் தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம், குஜராத் ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அரை இறுதிப்போட்டியில் தமிழகம்-குஜராத்தையும், பஞ்சாப்-ஹிமாச்சலையும், வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து, சனிக்கிழமை இரவு தமிழகம்-பஞ்சாப் அணிகளிடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியை தொடக்கி வைத்தார்.
இதில், தமிழகம் 3-க்கு 2 என்ற செட் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பெற்று கோப்பையை வென்றது. தமிழக அணிக்கு சுழற் கோப்பை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற பஞ்சாப், மூன்றாம் இடம் பெற்ற குஜராத், நான்காம் இடம் பெற்ற ஹிமாச்சல பிரதேச அணிகளுக்கும் கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.