ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வென்றது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் மிகத்திறமையாகப் பந்துவீசி இந்திய அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்கள். எனினும் 4 டெஸ்டுகளிலும் புவனேஸ்வர் குமார் விளையாடவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர் இன்று கூறியதாவது:
நான் நல்ல உடற்தகுதியுடன்தான் இருந்தேன். ஆனால் 100 சதவிகிதம் இருந்தேனா என்றால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. 5 நாள்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டத்தில் என்னால் முழுமையாக ஈடுபட்டிருக்கமுடியுமா என்று தெரியவில்லை. நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். அவர்கள் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்கள். இதனால் என்னால் இப்போது 100 சதவிகிதம் நல்ல உடற்தகுதியுடன் விளையாட முடிகிறது. டெஸ்ட் தொடர் நடந்த சமயத்தில் என்னால் இப்படிச் சொல்லமுடியவில்லை.
கடந்த ஒருநாள் ஆட்டத்தில் நான் சிறப்பாகப் பந்துவீசவில்லை. அதேசமயம் அது மோசமாகவும் இல்லை. நாளாக ஆக நிச்சயம் முன்னேற்றம் தெரியும். கடந்த ஒரு மாதமாக நன்குப் பயிற்சி பெற்றதால் 130-135 கி.மீ-க்குப் பந்துவீசமுடிகிறது. இப்போது காயம் எதுவும் இல்லாமல் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.