தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தமிழகம்-சாய் அணிகள் மோதுகின்றன.
சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் மொத்தம் 41 அணிகள் பங்கேற்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடந்த போட்டிகளின் முடிவில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
எழும்பூர் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் எச் பிரிவில் முதலிடம் பிடித்த சாய் அணியும் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா அணியும் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் சாய் அணி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜி பிரிவில் முதலிடம் பிடித்த தமிழக அணியும், பி பிரிவில் முதலிடம் பிடித்த சசாஷ்த்ர சீமா பால் (எல்லை பாதுகாப்பு அணி) அணியும் மோதின.
இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக போராடின. அதன்பிறகு 5வது நிமிடத்தில் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பில் தமிழக அணி வீரர் ராயர் ஒரு பீல்டு கோல் அடித்து கணக்கை துவங்கினார்.
அதன்பிறகு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் முத்துசெல்வன் கோல் அடித்தார். முதல் பாதி நிறைவில் 2-0 என தமிழகம் முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் எஸ்.எஸ்.பி. வீரர்கள் கோலடிக்க கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் 41வது நிமிடத்தில் ராயர் மற்றொரு கோலடித்து 3 ஆக உயர்த்தினார். இறுதியில் 3-0 என வென்று தமிழகம் அரையிறுதிக்கு முன்னேறியது. சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் சாய் அணியுடன் மோதுகிறது.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் மத்திய தலைமை செயலக அணி 2-1 என எப்.சி.ஐ. அணியையும், பெங்களூர் அணி 5- 4 என பாட்டியாலா அணியையும் வீழ்த்தின. சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் மத்திய தலைமை செயலக அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன.