இந்திய கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு ஐசிசி திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளது.
சந்தேகத்துக்குரிய பந்துவீச்சு முறை தொடர்பான சோதனையில் அவர் பங்கேற்காததை அடுத்து, ஐசிசி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த 13-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ராயுடுவின் பந்துவீச்சு, ஐசிசி விதிகளை மீறிய வகையில் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதையடுத்து, தனது பந்துவீச்சு முறையை 14 நாள்களுக்குள் சோதனைக்கு உள்படுத்துமாறு ராயுடுவுக்கு ஐசிசி அவகாசம் அளித்திருந்தது.
அவர் அவ்வாறு சோதனைக்கு உள்படாத நிலையில், சர்வதேச போட்டிகளில் பந்துவீச அவருக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராயுடு தனது பந்துவீச்சு முறையை சோதனைக்கு உள்படுத்தி, விதிகளுக்கு உள்பட்ட வகையில் பந்துவீசுவதை உறுதி செய்யும் வரையில் அவர் மீதான இந்தத் தடை நீடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிசிசிஐ ஒப்புதலுடன் அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச எந்தத் தடையுமில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.